search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"

    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
    • போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை ஆஸ்பத்திரி நிர்வாகம், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தனர். போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் போதாக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புயல்களின் மிரட்டலும், பருவமழையின் ஆக்ரோஷமும் சென்னை மாநகரை புரட்டியெடுக்க தவறுவதில்லை.

    அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்களை மிகவும் கலங்கவைத்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் பெருமழை கொட்டியது. அந்த 2 நாட்களில் 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதாவது, தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் 47 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மூழ்கின.

    அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்தாலே, சென்னைவாசிகளின் பலருடைய நினைவுக்கு வருவது, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாத நிகழ்வுதான். அதன் தாக்கத்தில் இருந்து இதுவரை சென்னைவாசிகள் வெளியே வர முடியாமல் இருக்கின்றனர். அந்த அளவுக்கு 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்கள் மனதில் பதிந்துவிட்டது.


    அந்த ஆண்டு மட்டுமா... இப்போதும் விடுவதாக இல்லை என்ற ரீதியில் வங்க கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மியான்மர் நாட்டினரால் `மிச்சாங்' என பெயரிடப்பட்ட அந்த புயல் சென்னை மக்களை தண்ணீரால் தத்தளிக்க வைத்துவிட்டு ஆந்திர மாநிலம் நெல்லூரை நோக்கி கடந்துவிட்டது.

    அவ்வாறு கடக்கும் வேளையில் `மிச்சாங்' புயல் சென்னை மாநகர் மீது மழைநீரை வாரியிறைத்ததன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்திவிட்டது.

    மிச்சாங் புயல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

    இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.


    `மிச்சாங்' புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகு நேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

    சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிச்சாங் புயல் பந்தாடியது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் உள்ள திறப்புகள் வழியாக மழைநீர் பொங்கி வழிந்தபடி சாலைகள் தோறும் ஆற்றில் செல்வது போல் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக்காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.

    புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்த போதிலும், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவச பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பணிகளுக்கு சென்றனர். அதிலும் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    புயல் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், மருந்துகடைகள், பாலகம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. வீடுகளில் சமைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கியதால் ஓட்டல்களில் இட்லி, தோசை போன்றவை விரைவில் காலியாகிவிட்டன. அதைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் உடனடியாக தயார் செய்வதற்கு வாய்ப்பாக உள்ள சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இதே போன்று மதிய நேரத்தில் ஆங்காங்கே பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்கள் திறந்து இருந்தன. மேலும் டீ கடைகளும் சொற்ப அளவில் திறந்து இருந்தன.

    புயல் காரணமாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையிலும், ஏதேதோ காரணங்களுக்காக பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணித்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அதாவது, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள்கள் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, வெள்ளமானது அலைபோல் எழும்பியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.

    சென்னையின் இதயப்பகுதியான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை எனத் தொடங்கி தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளான பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நேற்று தொய்வின்றி மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சி அளித்தது. இதைப் பார்க்கும்போது சென்னை மாநகரமே தண்ணீரில் மிதப்பது போல் தான் தோன்றியது என்றால் அது மிகை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றதுமே பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதி தான் நேற்றைய மழையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு அங்கு மழையின் தாக்கம் பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.

    வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை சேலையூர் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. அதிலும் இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டன. இது மட்டுமன்றி, பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ஏரி உடைந்ததால் வேளச்சேரி நெடுஞ்சாலையில் அந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக அங்குள்ள பல் ஆஸ்பத்திரி அருகே பஸ்கள், டெம்போ வேன் உள்ளிட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், சேலையூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், நாராயணபுரம் பகுதி மக்கள் அங்கிருந்து வேளச்சேரிக்கும், சேலையூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த பகுதியில் வீடுகள் தரைத்தளம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. இதேபோன்று, முடிச்சூர், அனகாபுத்தூர், மதனபுரம் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.

    மொத்தத்தில், சென்னையின் பிரதான சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதோடு, எங்கு பள்ளம் இருக்கும் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. தேனாம்பேட்டை எஸ்.எம்.பாலாஜி பல் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள மரம் ஒன்று விழுந்ததில், ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் கார் ஒன்றும் சேதம் அடைந்தது. இதே போன்று, அண்ணாநகர் பகுதியிலும் மரங்கள் விழுந்து கார் சேதம் அடைந்ததை பார்க்க முடிந்தது.

    இதே போன்று, நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மொத்தத்தில் நேற்று பெய்த மழை காரணமாக சாலை போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து முழு வீச்சில் இயங்கவில்லை என்றே கூற முடியும். மெட்ரோ ரெயில் போக்குவரத்து மட்டும் தடையின்றி இயங்கியது.

    கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று அயனாவரத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால் 4 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று(செவ்வாய்க்கிழமை) மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    • நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 288 பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோத னைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் டாக்டர் உமா பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
    • மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியில் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    தொடர் மழையிலும் பணி செய்த தூய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் அந்த வார்டு குடியிருப்போர் நல சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 20 பேரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலர் நீலகண்டன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவம், குடியிருப்போர் சங்கத்தினர், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர்.
    • தஞ்சை அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தரஅசைவ உணவகத்துக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று கோலாகலாமாக கொண்டப்பட்டது.

    தஞ்சாவூரில் போடப்பட்டி ருந்த தற்காலிக கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும் ஆங்காங்கே தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர் .

    இந்நிலையில் போர்கால நடவடிக்கையாக விரைந்து குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

    இதன்படி சுமார் 100 தூய்மை பணியாளர்கள் அவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட தனி வாகனத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவர்களுக்கு தலைவாழையிலையில் மட்டன், முட்டையுடன் ஆவிபறக்க பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது .

    தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறி மரியாதை செய்ததாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர் .

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு உயர்தர அசைவ உணவகத்தில் அதுவும் குளிரூட்டப்பட்ட அறையில் சுடச்சுட ஆவி பறக்க அசைவ விருந்து பரிமாறப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது.

    தங்களது பிள்ளைகளை கூட இது போன்ற ஹோட்ட லுக்கு அழைத்து வரவில்லை.

    இந்த ஓட்டலை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

    ஆனால் குப்பை வாரும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவு அளித்து நல்ல மரியாதை அளித்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்துக்கு நன்றி என்றனர்.

    முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
    • தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டாடப்பட்டது.

    மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

    தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.

    அதனை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை மாநகராட்சியில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 100 முதல் 120 டன் குப்பை வரும். 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு தரம் பிரிக்கப்படும். கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது.

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வழக்கமாக சேகரமாகும் குப்பைகள் என தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    இதில் பட்டாசு கழிவுகள் மட்டும் சுமார் 20 டன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ள ப்பட்டது.

    கழிவுகளை கொண்டு செல்வதற்காக 40 கனரக வாகனங்கள் பயன்ப டுத்தப்பட்டன.

    • சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சாமளாபுரம்:

    கலைஞரின் நூற்றாண்டு விழா - தீபாவளி பண்டிகையையொட்டி சாமளாபுரம் தி.மு.க. பேரூர் செயலாளரும், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு கவுன்சிலருமான பி.வேலுச்சாமியின் ஏற்பாட்டில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி ெதாடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு கவுன்சிலர் வினோஜ்தயாளன், 2-வது வார்டு பட்டீஸ்வரன், 10-வது வார்டு கனகசபாபதி, 4-வது வார்டு பிரதிநிதி கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. 

    • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    • கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்பான அறிமுக கூட்டம் நல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் அலுவலர் விஜிலா விஜி பேசுகையில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கும் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அப்போதுதான் அரசு செப்டிக் டேங்க் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியும், முறையான பயிற்சி வழங்கியும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் பேசியதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி எவ்வளவு வழங்கப்படுகிறது. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் ரூ.10, ரூ.20 வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்துக்கு காரணம் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா். இது மிகவும் தவறானதாகும்.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் வழங்கக்கூடாது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தில் சோ்த்து அடையாள அட்டையின் எண்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளா் ஆணையம் உள்ளது.

    இந்த மாநிலங்களில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, தமிழகத்திலும் மாநில தூய்மை பணியாளா் ஆணையத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    ஒப்பந்த முறையால் சரிவர ஊதியம் வழங்குவதில்லை.பி.எப்., இ.எஸ்.ஐ.கட்டுவது, காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும்போது அவா்களது வாழ்வாதாரம் உயரும். அனைத்து தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று அரசு நினைத்தால் கா்நாடகம், ஆந்திரத்தில் உள்ளது போன்று அரசு சாா்பில் நேரடியாக அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உதாரணமாக திருப்பூா் மாநகராட்சியே ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை இல்லாவிட்டால் தொழிலாளா்களுக்கு சரியான முறையில் ஊதியம் சென்றடைவதுடன், தூய்மைப் பணியாளா்க ளுக்கான பிரச்னைகளும் தீரும். ஆகவே, தமிழக அரசு இத்தகைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாநகராட்சி உதவி ஆணையா்கள், நகராட்சி ஆணையா்கள், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, பேரூராட்சி செயல் அலுவலா்கள், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட் டுத்திட்ட சிறப்பு கணக்கெ டுப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி னார். ஆணையர் ரெங்கநா யகி முன்னிலை வகித்தார்.

    இதில் மானாமதுரை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தூய்மைப் பணியா ளர்களுக்கு பல்வேறு திட் டங்களை செயல்படுத்துவ தற்காக அவர்களுக் கான மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மைப் பணி யாளர்களை கண்டறிவதற் காக நடைபெறும் கணக்கெ டுப்பு முகாமில், தரைமட்ட கழிப்பறை தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியா ளர்கள், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக் கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது கழிப்பிடங்களில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களை சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்க ளுக்கு அடையாள அட்டை களை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி வழங்கினார். கணக்கெடுப் பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை தூய்மை பணியாளர்கள் வழங்கி அவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    முகாமில் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண் டிச்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவ ராணி, பிரபு, கார்த்தி, ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, நகர்மன்ற உறுப்பி னர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×